Sunday, January 18, 2009

சத்தியத்தைக் காப்பாற்றுவோம்! - செ.ஆகாஷ்ராஜ்


தில்லையம்பலம் எனப் படும் சிதம்பரத்தில் வசித்தவர் திருநீலகண்டர். மண்பாண்டத் தொழிலாளியான இவர், சிவனடியார்களுக்கு திருவோடு செய்து வழங்கி வந்தார். "திருநீலகண்டம்' என்று சிவபெருமானின் திருநாமத்தைச் சொல்லிக் கொண்டிருப்பார். திருமணம் ஆகி மனைவியுடன் இனிய இல்லறம் நடத்தி வந்தார்.

ஒருமுறை, ஒரு பொது மாதுவைப் பார்த்த நீலகண்டர், அவளிடம் மனதைப் பறிகொடுத்து விட்டார். அவள் இல்லத்தில் தங்கியிருந்தார். இந்த விஷயம், நீலகண்டரின் மனைவிக்குத் தெரிந்து விட்டது.


"நானிருக்க, இன்னொரு பெண்ணைத் தொட்ட உம்மை இனி எந்நாளும் தொட மாட் டேன்; நீரும் என்னைத் தொடக் கூடாது. இது திருநீலகண்டனாகிய சிவபெருமான் மீது ஆணை...' என்று சொல்லி விட்டாள். இறைவன் மீதே ஆணையிட்டுச் சொன்ன பிறகு, அவளுடன் பெயரளவுக்கே இல் லறம் நடத்தி, வாழ்நாளைக் கழித்து விட்டார் நீலகண்டன்.


இந்த தம்பதியர் முதுமையையும் அடைந்து விட்டனர். ஒரு துறவியின் வடிவில் அந்த வீட்டிற்கு வந்த சிவபெருமான், தன் திருவோட்டை நீலகண்டரிடம் கொடுத்தார்.


"மகனே! இது மிகவும் விலை உயர்ந்தது. இதில் ஒருமுறை பிச்சையிட்டு விட் டால், அன்று முழுக்க அதில் இருந்து உணவு வரும். எனக்கு மட்டுமின்றி, பிற சிவனடியார்களுக்கும் இந்த உணவு பயன்படுகிறது. இதை பத்திரமாக வைத்திரு. நான் வெளியூர் செல்கிறேன். திரும்ப வந்து பெற்றுக் கொள்கிறேன்!' என்று ஒப்படைத்தார்.


நீலகண்டரும் அதை வாங்கி பத்திரமாக வைத்தார். சில நாட் களில் அதை மறையச் செய்த சிவபெருமான், மீண்டும் வந்து திருநீலகண்டரிடம் திருவோட் டைக் கேட்டார். அது காணாமல் போனதை வருத்தத்துடன் சொன்ன நீலகண்டரை, நம்பாதவர் போல சிவபெருமான் நடித்தார். "நீ பெரும் ஆசைக் காரன். நீ தான் என் திருவோட் டைத் திருடிவிட்டாய்...' என்று திட்டித் தீர்த்தார். தான் அந்த ஓட்டை திருடவில்லை எனச் சொல்லிக் கதறினார் நீலகண்டர்.

"அப்படியானால் உன் மனைவியின் கரத்தைப் பற்றி கோவில் தெப்பக்குளத்தில் மூழ்கி சத் தியம் செய்...' என சிவன் சொல்ல, தங்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்னை குறித்தும், தன் மனைவியை தொட முடியாமல் இருப்பது குறித்தும் சிவனிடம் சொன்னார் நீலகண்டர்.


அவரிடம் ஒரு கம்பைக் கொடுத்த சிவபெருமான், கம் பின் இரு நுனிகளையும் பிடித்து நீரில் மூழ்குமாறு உத்தரவிட்டார். இருவரும் அவ்வாறு செய்யவே, முதுமை நீங்கி, இளமையுடன் எழுந்தனர். கரையில் நின்ற துறவியைக் காணவில்லை. பின்னர், ரிஷப வாகனத்தில் சிவபார்வதி அவர்கள் முன் காட்சி தந்தனர்.

சிவன் மீது செய்த சத்தியத்தைக் காப்பாற்ற, மனைவியை வாழ்நாள் முழுவதும் தொடாமல் வாழ்ந்தமைக்காக நீலகண்டரைப் பாராட்டிய அவர்கள், தம்பதியர் மீண்டும் ஒற்றுமையாக வாழ ஆசியளித் தனர். அவரது குருபூஜை தை மாத விசாகத்தன்று நடத்தப்படுகிறது.

வயது ஒரு தடையே அல்ல... எதற்கு? - - வைரம் ராஜகோபால்


"நல்ல காரியம் செய்தவன் ஒருநாளும் கெடுவதில்லை என்பது பகவான் வாக்கு. மனிதன் ஏதாவது நல்ல காரியம் செய்ய வேண்டும். நல்ல காரியம் என்றால், பிறருக்கு பயன்படக் கூடியதான ஒரு காரியம். இதைப் பணத்தாலோ, பொருளாலோ, உடல் உழைப்பாலோ செய்யலாம்.


இப்போது செய்யப்படும் தானமோ, தர்மமோ... இப்போது பலன் அளித்தாலும் அளிக்கும் அல்லது வரும் ஜென்மாக்களிலும் அளிக்கலாம். வரும் சந்ததிகளுக்கும் கூட அந்த பலன் கிடைக்கலாம். தர்மம் என்றைக்காவது பலன் கொடுத்தே தீரும். குதிரை மீது ஏறி ஊரை சுற்றிப் பார்க்கப் போனான் ஒரு ராஜா. அப்போது, வயலில் தென்னங்கன்று ஒன்றை ஒரு வயதான கிழவன் நட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தான்.


அவர் அருகில் போய் குதிரையை நிறுத்தினான். "ஓய், பெரியவரே!' என்று கூப்பிட்டான். பெரியவர் எழுந்து ராஜாவை பார்த்து கும்பிடு போட்டு நின்றார். "இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?' என்று கேட்டான் ராஜா.


"இங்கே இரண்டு தென்னங் கன்றுகளை நட்டுக் கொண்டிருக்கிறேன் மகாராஜா!' என்று அவர் பதில் சொன்னார்.


உடனே, ராஜா சிரித்து விட்டு, "ஐயா! உமக்கோ வயது தொன்னூறு இருக்கும் போல் இருக்கிறதே! இந்த வயதில் தென்னங்கன்று நட்டு, அது காய்த்து தேங்காய் சாப்பிடலாம் என்று நினைக்கிறீர்களே! அதுவரையில் உயிர் வாழவும் ஆசைப்படுகிறீர்களே?' என்று கேட்டான். அதற்கு, அவர், "மகாராஜா, எனக்கு வயதாகி விட்டது என்பது தெரியும்; இந்தத் தென்னங் கன்றுகள் வளர்ந்து காய் காய்ப்பதற்கு இன்னும் பல வருஷங்கள் ஆகும் என்பதும் எனக்குத் தெரியும். அதுவரை நான் இருப்பேனா என்பதும் சந்தேகம் தான்.


"ஆனால், இந்தத் தென்னங் கன்றுகளை எனக்காக நடவில்லை. இந்தத் தென்னங் கன்றுகள் மரமாகி, பலன் தரும்போது என் பிள்ளைகள், பேர பிள்ளைகளும் அனுபவிப்பர். அவர்களுக்காகத்தான் இதை நடுகிறேன் ராஜா!' என்றார்.


சந்தோஷப்பட்டான் ராஜா. வரும் சந்ததியினருக்காக இப்போதே இவர் இப்படி ஒரு ஏற்பாடு செய்கிறாரே என்று மகிழ்ச்சியடைந்து, ஒரு பை பொற்காசுகளை அவரிடம் கொடுத்தான்.


அதாவது, இப்போது ஏதோ ஒரு நல்ல காரியம் செய்து விடு. அது தானமாகவோ, தர்மமாகவோ, எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். இதனுடைய பலன் யாருக்கு, எப்போது கிடைக்கும் என்று யோசித்துக் கொண்டிராதே! அதன் பலன் கொடுக்க வேண்டிய காலத்தில், யாருக்கு கொடுக்க வேண்டுமோ, அவர்களுக்கு கொடுத்து விடும்.


மனிதன் மனிதனை ஏமாற்றுவதுண்டு; தர்மம் என்றுமே ஏமாற்றாது. பலனைக் கொடுக்கக் காத்துக் கொண்டிருக்கும்.